Saturday, August 2, 2014

கரையாளர் மற்றும் கரையார் என்பவர் யார்?

ஏற்கனவே நாம் கரையாளர் மற்றும் கரையார் யார்? என்பதை விளக்கி நமது 'மள்ளர் ஆவணத்தில்' வெளியிட்டு இருந்தோம். அதைத் தெரிந்தும் நீ என்ன சொல்வது நாங்கள் எங்கள் வழியில் எப்போதும் போல் பொய் சொல்லிக் கொண்டே இருப்போம்! என்று சிலர் 'கரையாளப் பள்ளனை' சொந்தம் கொண்டாடி இருக்கிறார்கள்.

  கரையாளப் பள்ளன்

        மீன் வகைகளை மீனவ மக்களை விட அதிகம் பேசும், ஆய்ந்து நோக்கும் ஒரே இலக்கியம் 'பள்ளு இலக்கியமே'. (மீன் வகைகளை பேசும் அத்தனை பள்ளு பாடல்களும் விரைவில் இங்கே பின் இணைப்பாக பதிப்பிக்கப் படும்). இவ்வாறாக பள்ளர்களின் வாழ்வியலோடு மீன்கள் நெருக்கமான உறவுடையவைகளாக உள்ளன. ஏனெனில் பள்ளர்களின் வேளாண் தொழிலோடு தொடர்புடையது ஆறு, குளம், கண்மாய், கிணறு முதலிய நீர்நிலைகலாகும். மள்ளர்கள் நெல்லுக்கு நீர் பாய்ச்சும் போது வயல்களில் கயல்கள் விளையாடிய செய்தியை இலக்கியங்கள் பேசக் காணலாம். மருத நிலத்தில் உள்ள நீர் நிலைகளில் தோன்றும் மீன்களைப் பற்றி பாடியவர்கலேல்லாம் பள்ளர்களே. மீன் வகைகளைப் பற்றிய அறிவு பள்ளர்களிடம் இருந்ததென்பதைப் பள்ளுப் பாடல்கள் மூலம் அறியலாம்.(காண்க பின் இணைப்பு). பள்ளர்களே மீனினத்திற்க்குப் பெயர் சூட்டி வகைப்படுத்தியுள்ளனர் என்பதே மெய்மை வரலாறு. இன்றளவும் மருத நிலத்தில் பள்ளர்கள் மீனவர்களாகவும், வாழ்ந்து வருகின்றனர். பள்ளர்களும், பள்ளத்தியரும் குளங்களில் மீன் பிடிப்பதை நடப்பிலும் காணலாம். பள்ளர்களில் பெரும்பாலும் எல்லோரும் நீச்சல் தெரிந்தவர்களாகவும், மீன் பிடிக்கத் தெரிந்தவர்களாகவும், மீன் இறைச்சி உண்பவர்களாகவும் உள்ளனர் என்பது கண்கூடு. மருத நில மக்கள் உழவுத் தொழில் மட்டுமின்றி மீன் பிடிக்கும் தொழிலும் செய்துள்ளனர் என்பதை,


        "வானம் வேண்டா வறனில் வாழ்க்கை

          நோன் ஞாண் வினைஞர் கோளறிந்து ஈர்க்கும்

          மீன் முதிர் இலஞ்சிக் கலித்த தாமரை..." (அகநானூறு 186 : 1 )


என்னும் அகநானூற்றுச் செய்யுலடியின் மூலம் அறியலாம். இதனை அடியொற்றிப் பார்த்தால் பள்ளர்களுக்கும், மீன்களுக்குமான உறவை விளங்கிக் கொள்ளலாம்.


        கி.பி.9 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த திவாகர நிகண்டு, நெய்தல் நில மக்கட் பெயரினைப் பரதர்,நுளையர், கடலர்,வலையர் , சலவர், திமிலர் என்றும், நெய்தல் பெண்டிர் பெயரினை நுளைச்சியர், பரத்தியர், (நுரைக்) கடற்ப்பிணாக்கள் என்றும், நெய்தல் நிலத் தலைவன் பெயரினைக் கொங்கன், துறைவன், மெல்லன், புலம்பன், கடற்சேர்ப்பன் என்றும் இலக்கணபப் படுத்தியுள்ளது. இப்பெயர்கள் நெய்தல் நில மக்களான மீனவர்களின் குலம் சார்ந்தவையாகும். இதில் 'கரையார்' என்னும் மீனவச் சாதி பெயர் இடம் பெறவில்லை என்பது கவனிக்கத் தக்கதாகும். நெய்தல் நிலத்தில் பறந்து விரிந்து கிடக்கும் கடற்ப்பரப்பில் மீன் பிடிக்கும் மக்களுக்குப் 'பரதவர்' என்னும் பெயர் ஏற்ப்பட்டது. படகில் சென்று மீன் பிடித்தவர்களே படவர் - பரவர் என்றாயினர் எனக் கொள்வோரும் உளர். மருத நிலத்தில் ஆற்றங்கரையிலும், குளத்தங்கரையிலும், கண்மாய்க் கரையிலும் இருந்து மீன்பிடிக்கும் பள்ளர்களுக்குக் 'கரையார்' என்னும் பெயர் ஏற்பட்டது. 


         வேளாண்மைத் தொழிலுக்காக ஆறுகளுக்குக் கரைகண்ட பள்ளர்களே ஆற்றின் மீன்பிடித் தொழிலையும் மேற்கொண்டனர்.  மருதநிலமே கடை நிலம் எனப்பட்டது. எனவே பள்ளர்களுக்குக் 'கடையர்' என்னும் பெயரேட்பட்டது. அவ்வாறே கரையில் மீன்பிடிக்கக் கூடிய பள்ளர்களுக்குக்  'கரையார்' என்ற பெயர் ஏற்ப்பட்டது. நெய்தல் நில நாகரிகம், மருத நில நாகரிகம் தோன்றியதற்குப் பிறகே தோன்றியதென்பதற்கு, அது எல்லா நாகரிங்கங்களுக்கும் இறுதியில் பேசப் படுவதே சான்றாகும். ஆகக் கட்டுமரங்கள் மூலம் கடலுக்குச் சென்று மீன்பிடிக்கும் பழக்கம் மருத நில நாகரிகத்திர்க்குப் பின்னரே ஏற்ப்பட்டிருக்க வேண்டும். பள்ளர்களில் வங்கப் பள்ளர்,அளத்துப் பள்ளர் என்ற வகையினர் தூத்துக்குடிப் பகுதியில் வாழ்ந்து வருகின்றனர். வங்கம் என்றால் கப்பல்;கப்பல் கட்டக் கூடிய பள்ளர்கள் வங்கப் பள்ளர்கள் ஆயினர். அளம் என்றால் உப்பளத்தை குறிக்கும். உப்பளத்தில் பணியாற்றும் பள்ளர்கள் 'அளத்துப்பள்ளர்கள்' என்றாயினர். இவாகைப் பள்ளர்களின் முகாமையான தொழில் இன்றளவும் மீன்பிடித்தலேயாகும். வங்கப் பள்ளர், அளத்துப் பள்ளர், கரையாப் பள்ளர்  முதலிய பள்ளர் சாதி வகைகள் மருத நிலத்து நெல்லின் மக்களுக்கும், நெய்தல் நிலத்துக் கடலின் மக்களுக்கும் ஓர் இணைப்புப் பாலமாக விளங்கக் காணலாம். 


        கரையாளன், ஆற்றங்கரையான், குளத்தங்கரையான் எனக் பெயரிடும் பள்ளர்கள் நடுவே இன்றும் இருந்து வருகிறது. அய்யனார் கோயில்கள் ஆற்றங்கரையிலும், குளத்தங்கரையிலுமே அமைந்திருக்கும். ஐயனாரைக் குல தெய்வமாகப் பள்ளரும், கரையாரும் வழிபட்டு வருவதை கள ஆய்வில் காணமுடிகிறது. இம்மக்களின் இக்குல தெய்வ வழிபாடு - முன்னோர் வழிபாடு பள்ளர்களும், கரையார்களும் ஒரே குலம் என்பதை உறுதி செய்கிறது. 


"வீரக் கரையாள ராசாவும்
வீர மார்த்தாண்ட ராசாவும்
அண்ணன் தம்பி இருபேரும்
அசுவத்தில் ஏறலுற்றார்
பாண்டியமார் இருபேரும்
.........................................
நாற்பது வீட்டுப் பள்ளர்களை
நலமுடனே கூட்டிவந்தனர்"

    (பேராசிரியர் சு.சண்முக சுந்தரம், ஐந்து கதைப்பாடல், ப.12 ) எனப் பேராசிரியர் சு. சண்முகசுந்தரம்(மறவர்) தனது ஐந்து கதைப் பாடல் ஆய்வில் வீரக்கரையாள ராசா, வீரமார்த்தாண்ட ராசா என்னும் பாண்டிய வேந்தர்கள் ஆட்சி செய்த பாண்டிய அரசின் உயிர்நாடியாக விளங்கிய நாற்பது வீட்டுப் பள்ளர்களை அழைத்து வந்த செய்தியைப் பதிவு செய்துள்ளார். 


தி.நடராசன் தொகுத்த கதைப்பாடல்களில் பள்ளர்களின் வீர வரலாறு பேசப்படுகின்றது. அதில்


"தட்டானென்கின்ற கொட்டாப்புளி
சமர்த்தனுக் கொரு கையோலை
பள்ளக் குடும்பன் கரையாளன்
பாதனுக்கு மொரு கையோலை
ஆயிரத்து ஐநூறு ராணைவத்தாரும்
அன்புடன் வந்தார் பாஞ்சாலத்தில்"
.....................................................
"வடுகத் தட்டானொருவன்
வாசம் பெற்ற கொட்டாப்புளி
பள்ளக் குடும்பன் கரையாளன்
பாயும் புலிபோல பள்ளர்களும்
எல்லோரும் கூடி அளப்புகள் பேசி
யெட்டு நாளைக் குள்ளாக
பாளையங் கோட்டையில் வைத்து
நம்மாளை பட்டமும் கட்டியே
வைக்க வேண்டும்" 


    மேற்கண்ட கதைப்பாடல் பள்ளர் படைத் தலைவன் ஒருவனை 'பள்ளக் குடும்பன் கரையாளன்' என்கிறது. யாழ்ப்பாணத்திலும் ஐயனார் வழிபாடும், அண்ணமார் வழிபாடும் பள்ளருக்கும், கரையாருக்கும் உரியதாக விளங்கக் காணலாம்.


    சுப்பிரமணிய நாவலரால் இயற்றப்பட்ட திருவேட்டைநல்லூர் அய்யனார் பள்ளு செய்யுள் 44 இல் இடம் பெற்றுள்ள மலைக்குரிய தெய்வமான வானவனை - இந்திரனை மீனவன் எனக் குறிக்கும் அடிகள் வருமாறு:


        "மீனவன்செந் திருவேட்டை வானவன் நல்லூர்செழிக்க
        வேணமழை பெய்யும் நாளை காணும்
பள்ளீரே"


திருநெல்வேலி மாவட்டம், நாஞ்சான்குளத்தில் பள்ளர்கள் தங்களின் குல தெய்வமாக 'மாசானக் கரையான்' என்னும் தெய்வத்தை வழிபட்டு வருகின்றனர்.


விருதுநகர் மாவட்டம், மானூர் பள்ளர் -ஆசாரிமார் செப்பேட்டில் அக்கசாளைக் குடும்பர்களில்


        "அஞ்ஞப் பள்ளு, அச்சைப் பள்ளு, மங்கல நாட்டுப் பள்ளு, கோத்திரப் பள்ளு, பட்டனக்கரைப் பள்ளு" என்பதில் கரையார் என்ற பள்ளர் பிரிவும் இடம்பெறக் காணலாம். தவிர, அணைக்கரையார், காலான்கரையார், அக்கரைகண்டார், பாலக்கரைநாட்டார் உள்ளிட்ட பள்ளர் சாதி வகைகளும் இவ்விடத்தே நினைத்தற்கு உரியனவாகும்.

        பட்டினக் கரையார் - பள்ளருள் ஒரு வகையினர் (Pattinak Karaiyar - A sub-divisioin of the pallar caste)  என்கிறது. சென்னைப் பல்கலைக் கழக வெளியீடான 'தமிழ் லெக்சிகன்' அகராதி பக்கம் 346 . பட்டினம் என்றால் கடற்கரை ஊர் என்று பொருள். 


        இப்பட்டினக்கரையார் என்னும் பள்ளர்களில் ஒரு சாரார் மீன், கருவாடு, உப்பு வணிகத்தில் ஈடுபட்டுள்ளனர். இத்தோடு முத்துக் குளித்தலில் கிடைத்த முத்துகளை விற்பனை செய்யும் பொருட்டு, இவர்தம் வணிக வளர்ச்சி கடல்கடந்து சென்றது. பின்னர் பல்பொருள் வணிகத்தில் இறங்கிய இவர்கள் பொருளியல் மேம்பாடு அடைந்து அதனை அடியொற்றியே தங்களுக்குள் கொள்வினை கொடுப்பினையை ஏற்படுத்திக் கொண்டு தனிக் குமுகமாகவே உருவெடுத்தனர். இவர்களே இன்று நகரத்தார்களாக - நாட்டு கோட்டைச் செட்டியார்களாக அறியப் படுகின்றனர். பள்ளருக்கும் கரையாருக்கும் குல தெய்வமாக விளங்கும் ஐயனாரே நாட்டுக் கோட்டைச் செட்டியார்களுக்கு குல தெய்வமாகும். பின்னாளில் வணிகத்தில் ஈடுபட்ட பல்வேறு சாதிக் குழுக்களும் நகரத்தார்களாக நாட்டுக் கோட்டைச் செட்டியார்களாக உருவெடுத்தனர்.